தற்கொலை


   இந்திய தண்டனைச் சட்டம்,1860:

பிரிவு:305. குழந்தையின் அல்லது பைத்தியம் பிடித்தவரின் தற்கொலைக்கு உடந்தையாயிருத்தல்:

“18 வயதுக்குட்பட்ட அல்லது பைத்தியம் பிடித்த அல்லது, வெறி பிடித்த அல்லது, அறிவிலி அல்லது குடி போதையிலிருக்கும் எவரேனும் தற்கொலை செய்து கொண்டால், அத்தகைய தற்கொலை செய்துகொள்ளப்படுவதற்கு உடந்தையாயிருக்கிற எவரொருவரும், மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டணையோ அல்லது பத்து ஆண்டுகள்வரை நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்குச் சிறைதண்டனையோ விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அவரை அபராததிற்கு உள்ளாக்கவும் செய்யலாம்”.

பிரிவு:306. தற்கொலைக்கு உடந்தையாயிருத்தல்:

“ஒருவர் தற்கொலை செய்துகொண்டால், அத்தகைய தற்கொலை செய்து கொள்ளப்படுவதற்க்கு உடந்தையாயிருக்கிற எவரொருவரும் பத்து ஆண்டுகள் வரை நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்குச் சிறைதண்டனை விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்”.

பிரிவு:309. தற்கொலை செய்துகொள்ள முயற்சி:

“தற்கொலை செய்துகொள்ள முயல்கிற மற்றும் அத்தகைய குற்றம் செய்ய ஏதாவது ஒரு செயலைச் செய்கிற எவரொருவரும், ஓர் ஆண்டு வரை நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்க்கு மெய்காவல் தண்டனையோ அல்லது அபராதமோ விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்”.

தற்கொலை தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்புகள்:...

1986ஆம் ஆண்டு, ‘தற்கொலைசெய்துகொள்வதும் அடிப்படை உரிமையே’ என்ற வாதத்தை அடிப்படையாகக் கொண்டு, முதன்முறையாக ஒரு விசித்திரமான வழக்கு நீதிமன்றத்தில் விவாதத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

மும்பை நகர காவல்படையைச் சேர்ந்த காவலரும், மனநலம் பாதிக்கப்பட்டவருமான ‘மாருதி ஸ்ரீபதி துபால்’ என்பவர், தனது வாழ்வாதாரத் தேவைக்காக ஒரு கடை வைத்துக்கொள்ளக் கோரியிருந்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஏற்பட்ட மன அழுத்ததின் விளைவாக, மாநகராட்சி அலுவலக அறைக்குள் தனக்குத்தானே நெருப்பு வைத்து தீக்குளிக்க முயன்றார். இதனால் அவர் மீது, தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் என்ற குற்றத்தின்படி வழக்குபதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார். அவரது தர்ப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், ‘தற்கொலை செய்து கொள்வதற்கான விருப்பமானது இயற்கையானதல்ல, ஆனால் அதேவேளையில் அது சாதாரணமானதோ, பொதுவானதோ அல்ல. மேலும் நோய், வாழ்வில் தாங்கிக் கொள்ளமுடியாத நிலைகள், கொடுமைகள், அவமானமான சூழல்கள் மற்றும் புத்தி சுவாதீனமில்லா நிலை போன்ற பல்வேறு நிலைகளில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள எண்ணம் கொள்கிறார். எனவே இந்திய அரசியல் சாசனத்தின் சரத்து 21ல் வகுத்துரைக்கப்பட்டுள்ள, உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற பதத்திற்குள், தனது உயிரை தானே மாய்த்துக்கொள்வதற்கான உரிமையும் உள்ளடங்கும் என்றும், தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் என்பது தண்டனைக்குரிய தனிக்குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ள, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309ஆனது இந்திய அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது என்றும் அறிவித்தது.

ஆனால் 1987ஆம் ஆண்டு, இதற்கு முற்றிலும் புறம்பாக ஆந்திரபிரதேச உயர் நீதிமன்றமானது, ‘சென்னா ஜெகதீஸ்வர்’ என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற பதத்திற்குள், தற்கொலை செய்துகொள்வது உள்ளடங்காது என்றும், தற்கொலை செய்துகொள்ளவதற்கு தண்டனை வரையறுக்கப்பட்டுள்ள, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309ஆனது இந்திய அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது அல்ல என்றும் தீர்ப்பிட்டது.

தற்கொலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்:

மேற்கண்ட தீர்ப்பினை 1994ஆம் ஆண்டில் பி.ரத்தினம் என்பவர் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. தற்கொலை செய்து கொள்வது உரிமை என்றும், உரிமை இல்லை என்றும் வழங்கப்பட்ட தீர்ப்புகளினால் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து இறுதியாக, 1996ஆம் ஆண்டு, ‘கியான் கவுர்’ என்பார் தொடர்ந்த வழக்கில், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலதிற்கெதிராக தொடரப்பட்டிருந்த 6 வழக்குகளை ஒன்றாக இணைத்து, “தற்கொலை செய்வது ஒருவரின் அடிப்படை உரிமை அல்ல என்றும், இந்திய அரசியல் சாசனத்தின் சரத்து 21ல் வகுத்துரைக்கப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற பதத்திற்குள், தனது உயிரை தானே மாய்த்துக் கொள்வதற்கான உரிமை உள்ளடங்காது என்றும், தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் என்பது தண்டனைக்குரிய தனிக்குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ள, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309ஆனது இந்திய அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது அல்ல” என்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய ஆயம் விரிவாக விவாதித்து, தீர்ப்பிட்டது. இதே தீர்ப்பினை கடந்த 2011 மார்ச் மாதத்தில், கருணைக் கொலை தொடர்பான, பரவலாகப் பேசப்பட்ட ‘அருணா ராமசந்திரா ஷன்பக்’ என்ற வழக்கிலும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.